ஆணழகன் போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர் திடீரென மயங்கி விழுந்து பலி…

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..
வடலூரில் ஆணழகன் போட்டி
கடலூர் மாவட்டம் வடலூரிலுள்ள ராஜ ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் ஆணழகன் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழகத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்பதற்காகச் சேலம் பெரிய கொல்லப்பட்டி, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் (வயது 21) என்பவர் வந்திருக்கிறார்.
75 கிலோ எடைப் பிரிவில் மேடை ஏற தயாரான ஹரிஹரன் மேடை ஏறுவதற்கு முன்பு மண்டபத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். பயிற்சியில் ஈடுபடும் முன்பு அவர் பிரட் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
அதன் பின் வார்ம் அப் செய்யும் போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுச் சுருண்டு விழுந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் உடனே அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர்.
இளம் வயதில் மாரடைப்பு
மருத்துவமனையில் ஹரிஹரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனிடையே ஹரிஹரன் மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார் எனக்கூறிய மருத்துவர்கள், உடற்பயிற்சி செய்யும் முன்பு அவர் சாப்பிட்ட பிரட் அவரது மூச்சு குழாயை அடைத்திருக்கலாம், அல்லது தீவிரமான உடற்பயிற்சியால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.
இது போன்று இளம் வயது விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து உயிரிழப்பது அதிகரித்துள்ளது. மேலும் சிறுவயது முதலே ஏதாவது நெஞ்சு வலி, மாரடைப்பு,மூச்சுத் திணறல் போன்ற இதய பிரச்சனைகள் இருந்தால் அவர்களை விளையாட்டில் பங்கேற்க விடாமல் பெற்றோர் தான் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் தொடர்ந்து பரிந்துரைத்து வருகின்றனர்.
ஹரிஹரன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் வடலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது