சிங்கப்பூரில் உண்மையாகவே நடத்தப்பட்ட Squid Game போட்டி: தமிழ்நாட்டைச் சேந்தவர் வெற்றி



சிங்கப்பூரில் நடந்த ஸ்க்விட் கேம் போன்ற ஒரு நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
Squid Game
தென் கொரிய தொடரான ஸ்க்விட் கேம் (Squid Game) பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? Netflix இல் வெளியான பிறகு, இந்தத் தொடர் சர்வதேச அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பணக் கஷ்டத்தில் இருப்பவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடத்தப்படும் விளையாட்டுதான் கதையின் பின்னணி. இந்த விளையாட்டின் ஓவ்வொரு சுற்றிலும் வாழ முடியாதவர்களுக்கு மரணம்தான் விதி. இறுதி வெற்றியாளர் பெரும் தொகையைப் பெறுவார்.
இது நிஜ வாழ்க்கையில் நடந்தால்? Squid Game-ன் அதே ஐடியாவை எடுத்துக் கொண்டு, சிங்கப்பூரில் சமீபத்தில் ஒரு நிறுவனம் அத்தகைய விளையாட்டை ஏற்பாடு செய்தது. வித்தியாசம் என்னவென்றால், சுற்றுகளை கடக்க முடியாதவர்களுக்கு இங்கே மரணம் இல்லை.
தமிழ்நாட்டைச் சேந்தவர் வெற்றி பெற்றார்
இதில் தமிழகத்தைச் சேர்ந்த செல்வம் ஆறுமுகம் (Selvam Arumugam) வெற்றி பெற்றார். அதற்கு அவர் பபெற்ற பரிசு 18,888 சிங்கப்பூர் டொலர்கள். இந்திய பணமதிப்பில் இது ரூ.11.5 லட்சமாக இருக்கும். இது செல்வம் ஆறுமுகத்தின் ஒன்றரை வருட சம்பளத்திற்கு சமமான பரிசுத் தொகையாம்.
இந்த பரிசுத் தொகையை இந்தியாவில் ஒரு குடும்ப வீட்டைக் கட்டப் பயன்படுத்துவேன் என்று செல்வம் கூறினார். 15 உறுப்பினர்களைக் கொண்ட அவரது குடும்பம் தற்போது வாடகை குடியிருப்பில் வசிக்கிறது. பெற்றோரும், இரண்டு சகோதரர்களும் இறந்துவிட்டதால், அண்ணன் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கும் பணம் கொடுக்க விரும்புவதாகவும் கூறினார்.
சிங்கப்பூரில் வேலைபார்க்கும் செல்வம் ஆறுமுகம்
ஆறுமுகம் முதன் முதலில் 2007-ல் சிங்கப்பூர் வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று கனரக வாகன குத்தகை நிறுவனமான Pollisum Engineering-ல் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிறுவனத்தின் கட்டுமானத் தளங்களில் தூக்கும் பணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கிரேன் மற்றும் லிஃப்டிங் உபகரணங்களை பரிசோதித்து பராமரித்து, ரிகர் மற்றும் சிக்னல்மேனாக செல்வம் பணிபுரிகிறார்.
42 வயதான செல்வம் ஆறுமுகம், இந்த விளையாட்டைப் பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை என்று கூறினார். விளையாட்டின் விதிகள் தனக்கு புரியவில்லை என்றாலும், தன்னால் முடிந்தவரை முயற்சித்தேன். சிவப்பு விளக்கு மற்றும் பச்சை விளக்கு விளையாட்டில், தனக்கு முன்னால் இருந்த போட்டியாளர்கள் என்ன செய்கிறார்களோ அதைப் பின்பற்றி எலிமினேஷனைத் தவிர்க்க முடிந்தவரை வேகமாகச் சென்றதாக ஆறுமுகம் கூறினார்.