போர் தொடர்பில் இஸ்ரேல் பிரதமரை வலியுறுத்திய பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்!

November 20, 2023 at 7:50 pm
pc

ஹமாஸ் படைகளுக்கு எதிரான இஸ்ரேலின் போரில் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை கவலை அளிப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பிரதமர் நெதன்யாகுவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அக்டோபர் 7ம் திகதி நாட்டின் வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலை நடத்திய ஹமாஸ் படைகளை மொத்தமாக அழிப்பதாக இஸ்ரேல் சபதம் செய்துள்ளது. குறித்த தாக்குதலில் இஸ்ரேலிய மக்கள் 1,200 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட பதில் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 13,000 கடந்துள்ளது. இதில் பிஞ்சு குழந்தைகள் உட்பட சிறார்களின் எண்ணிக்கை மட்டும் 5,000 கடந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இஸ்ரேல் ஆதரவு நாடான பிரான்ஸின் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இஸ்ரேல் பிரதமரை தொடர்பு கொண்டு, பயங்கரவாதிகளை மொத்தமாக அழிப்பது கட்டாயத் தேவை என்றும், ஆனால் உடனடியாக மனிதாபிமான ஒப்பந்தத்தை முன்னெடுப்பதால் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று வலியுறுத்தியுள்ளார்.இதனிடையே, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுடனான உரையாடலில் மேற்குக் கரையில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களையும் மேக்ரான் கண்டித்துள்ளார் என கூறப்படுகிறது.மேற்குக் கரையில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை கவலை அளிப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் மேக்ரான் தெரிவித்துள்ளார்.பாலஸ்தீன ஜனாதிபதி உட்பட பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் ஒருமித்த முடிவாக ஹமாஸ் முன்னெடுத்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்க வேண்டும் என்றும் மேக்ரான் கோரிக்கை வைத்துள்ளார்.காஸா மீதான போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்களும் குடியேறியவர்களும் மேற்குக் கரையில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website