அதிகரிக்கும் தற்கொலை… 12ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை!!
தமிழக மாவட்டம் விழுப்புரத்தில் 12ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தமிழகத்தில் தொடர்கதையாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு அரசு பள்ளியில், மாணவியொருவர் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் பதறிப்போன ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர். அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், குறித்த மாணவியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது வீட்டிலேயே பூச்சி மருந்து குடித்த மாணவி அதன் பின்னர் பள்ளிக்கு வந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இளைஞர் ஒருவரை மாணவி காதலித்து வந்தது அவரது வீட்டில் தெரிய வந்துள்ளது.
காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாணவியின் பெற்றோர், உறவினர் ஒருவரின் மகனுக்கு தங்கள் மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.