அறுவை சிகிச்சையின் போது பரிதாபம்!! 8 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்!!

September 7, 2022 at 7:32 pm
pc

அறுவை சிகிச்சைக்கு முன்பு மயக்க மருந்து கொடுக்கப்பட்ட போது 8 வயது சிறுவன் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்துள்ளது.

இதைத்தொடர்ந்து சிறுவனின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று போராட்டம் நடைபெற்று வருகிறது.

தெலங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள லிங்யா தண்டா கிராமத்தில் 8 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். கடந்த 4ம் தேதி சிறுவனுக்கு நடந்த விபத்து காரணமாக வலது கை உடைந்துவிட்டது. எனவே சிறுவன் சிகிச்சைக்காக வாராங்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கு கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து நேற்று சிறுவனின் அறுவை சிகிச்சைக்காக ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்காக ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்வதற்கு முன்பாக சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அப்போது அடுத்த சில வினாடிகளில் சிறுவனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், சிறுவனுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சிறுவன் காலை 10.30 மணியளவில் உயிரிழந்த நிலையில், பிற்பகல் 1.10 மணியான பின்னரே சிறுவனின் பெற்றோரிடம் இது குறித்து மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், மருத்துவமனை வாசலில் உறவினர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.

8 வயது சிறுவன் மர்ம மரணம் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி தனியார் மருத்துவமனைக்கு அம்மாநில மருத்துவக்கல்வி இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 8 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website