அவசர நிலையிலும் ரஷ்யா செய்துவரும் இழிவான செயல்!
உக்ரைன் எல்லையில் வசிக்கும் ரஷ்ய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை வெளியேற்ற உள்ளூர் நிர்வாகம் கட்டணம் வசூலிப்பதை அறிந்து கொந்தளித்துள்ளனர். ரஷ்ய சமூக ஊடகங்களில் பெரும்பாலான பெற்றோர்கள் குறித்த நடவடிக்கையை கோபத்துடன் பதிவு செய்துள்ளனர். ரஷ்ய நகரமான Shebekino பகுதியில் இருந்து தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்ற பெற்றோர்கள் 30 பவுண்டுகள் செலவிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
Shebekino பகுதியானது பெல்கோரோட் மாகாணத்தின் ஒரு பகுதியாகும். பெல்கோரோட் மாகாணத்தில் தான் சமீப நாட்களாக உக்ரைன் கடுமையான ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
Shebekino பகுதி மக்களே தற்போது உள்ளூர் நிர்வாகத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் முன்வைத்துள்ளனர். முதலில் இலவச சேவை என தெரிவித்திருந்த உள்ளூர் நிர்வாகம், பின்னர் கட்டணம் வசூலித்துள்ளதாக கூறுகின்றனர்.
தலா 30 பவுண்டுகள் என வசூலிப்பதாகவும், இரண்டு பிள்ளைகளை அனுப்பி வைத்துள்ள தாயார் ஒருவர், தம்மிடம் எஞ்சியுள்ள தொகை மொத்தமும் கட்டணமாக செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அதிகாரிகள் தரப்பில் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், கட்டணம் வசூப்பதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளனர்.