ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணி: பழிவாங்க இளைஞன் செய்த கொடூரம்!

September 22, 2023 at 5:56 am
pc

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலப்பந்தல் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 24). இவரது மனைவி ஜெகதீஸ்வரி. இந்த தம்பதிக்கு புவனேஸ்வரி என்ற ஒரு மாத பெண் குழந்தை உள்ளது. திருமூர்த்தி (2) என்ற மகனும் இருந்தான். குருமூர்த்தி தனது தந்தையுடன் பெங்களூருவில் தங்கி இருந்து சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். அதேபோல் குருமூர்த்தியின் தம்பி ராஜேஷ் (22) என்பவரும் சில நாட்கள் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுவதும், சில நாட்கள் சொந்த ஊரிலும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் ராஜேசுக்கு, அவரது அண்ணி ஜெகதீஸ்வரி மீது மோகம் ஏற்பட்டது. இதனால் அவர், தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். ஆனால் இதற்கு மறுத்த ஜெகதீஸ்வரி, திட்டியதோடு ராஜேசுடன் பேசுவதையும் நிறுத்திக்கொண்டார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ராஜேஷ் ஜெகதீஸ்வரியை பழிவாங்குவதற்காக அவரது குழந்தை திருமூர்த்தியை கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 17-ந் தேதி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை ராஜேஷ் யாருக்கும் தெரியாமல் அவனது வாயைப்பொத்தி கழுத்தை நெரித்தும், தலையை சுவரில் அடித்தும் கொடூரமாக கொலை செய்தார். பின்னர் குழந்தையின் உடலை வீட்டில் இருந்த ஸ்பீக்கர் பெட்டிக்குள் மறைத்து வைத்து விட்டு எதுவும் தெரியாததுபோல் ராஜேஷ் வெளியே சென்று விட்டார். இதனிடையே மாயமான குழந்தை திருமூர்த்தியை ஜெகதீஸ்வரி தேடிப்பார்த்தார். அவன் கிடைக்காததால், இதுகுறித்து திருப்பாலப்பந்தல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் குழந்தை மாயமானது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று ஜெகதீஸ்வரியிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண்ணின் கை, அந்த ஸ்பீக்கர் பெட்டியில் தெரியாமல் பட்டது. அந்த பெட்டி கீழே விழுந்தது. ஸ்பீக்கர் பெட்டியின் பக்கவாட்டு இடைவெளியில் குழந்தையின் கை வெளியே நீட்டிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகதீஸ்வரி கதறி அழுதார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஸ்பீக்கர் பெட்டியை திறந்து பார்த்தபோது உள்ளே திருமூர்த்தி கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்தான். போலீசார் விசாரணை இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இந்த கொலை சம்பவம் குறித்து ஜெகதீஸ்வரி மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ராஜேஷ் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதனிடையே ராஜேஷ் தலைமறைவாகி விட்டார்.

இதனால் அவர் மீதான சந்தேகம் போலீசாருக்கு வலுத்ததை அடுத்து அவரை தேடும் பணியில் களம் இறங்கினர். கொழுந்தன் கைது போலீசார் தேடுவதை அறிந்த ராஜேஷ், திருப்பாலப்பந்தல் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார். பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஆசைக்கு இணங்க மறுத்ததோடு அண்ணி திட்டியதால் பழிவாங்கும் நோக்கத்தில் அவரது 2 வயது குழந்தையை கொலை செய்ததாக போலீசாரிடம் ராஜேஷ் கூறினார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website