இசையமைப்பாளர் டி.எஸ்.பி மீது சைபர் கிரைம் வழக்குப்பதிவு!
மத உணர்வுகளை புண்படுத்தியதாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் மீது ஹைதராபாத் நகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரது சமீபத்திய இசை ஆல்பமான ‘ஓ பாரி’ இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தெலுங்கு நடிகையும் நகைச்சுவை நடிகருமான கராத்தே கல்யாணி என்பவர் புகார் அளித்துள்ளார். புகாரின்படி, இசையமைப்பாளர் இந்த பாடலில் பக்தி பாடல்களின் துண்டுகளை பயன்படுத்தியுள்ளார், அறைகுறை உடையணிந்த பெண்கள் நடனமாடுகிறார்கள். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சைபர் கிரைம் ஏசிபி கேவிஎம் பிரசாத் ஊடகங்களிடம் கூறுகையில், இசையமைப்பாளர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
‘ஓ பாரி’ தெலுங்கில் ‘ஓ பிள்ளை’ என்ற பெயரில் பாடல் வெளியானது. பாடலில் தேவி ஸ்ரீ பிரசாத் நடித்துள்ளார். யூடியூப்பில் வெளியான நான்கு நிமிடங்கள் கொண்ட வீடியோவை ஏற்கனவே இரண்டு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.