இத்தாலி வரலாற்றை மாற்றி அமைக்கவிருக்கும் பெண்!
இத்தாலியின் வலது சாரி கட்சியை சேர்ந்த ஜியார்ஜியா மெலோனி பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பொருளாதார நிலை மோசமடைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இத்தாலியில் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மரியோ டிராகி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்ததைத் தொடர்ந்து பொதுத் தேர்தல் நடத்த முடிவானது. இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், இதுவரை எண்ணப்பட்ட 63 சதவீத வாக்குகளில் பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சி 26 சதவீதம் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.
கூட்டணி கட்சிகளான லீக் கட்சி 9 சதவீதமும், போர்ஜா இத்தாலியா கட்சி 8 சதவீதமும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் சார்பில் போட்டியிட்ட பெண் அரசியல்வாதியான ஜார்ஜியா மெலோனி பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜார்ஜியா மெலோனி இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மிகவும் வலதுசாரி அரசாங்கத்தின் தலைவராக நாட்டின் முதல் பெண் பிரதமராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். எனினும் இறுதி தேர்தல் முடிவுகள் இன்றிரவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.