இந்தியாவில் குழந்தைகள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள்.. அதிர்ச்சி தகவலை கூறிய யுவன்ஷங்கர் ராஜா..!
புதுச்சேரியில் 9 வயது சிறுமி 4 கொடூர நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதற்கு கமல்ஹாசன், பார்த்திபன் உட்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறிய போது, ‘இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்சனை என்பது ஒரு அழிவுகரமான பிரச்சனையாக உள்ளது. இந்திய குழந்தைகள் 28.9% பேர் ஏதாவது ஒரு வகையான பாலியல் குற்றங்களை அனுபவிக்கின்றனர் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எனவே குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் ஆகியவற்றை வேறுபடுத்தி கற்றுக் கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது. நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் இருந்து நமது குழந்தைகளை பாதுகாக்கவும், பாலியல் குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து குழந்தைகளிடம் சில விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது மிக முக்கியம்.
புதுச்சேரியில் போதைப் பொருள் தொடர்பாக நடந்த இந்த கொடூர குற்றம் நாளை எல்லோருக்கும் நடக்கலாம். எனவே ஒரு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும்’ என்று யுவன்ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.