இந்தியாவில் முதல் பலி ஆரம்பம் – குரங்கம்மை தொற்றுக்கு ஒருவர் பலி!

குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் கடந்த ஜூலை 21ம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளாவிற்கு வந்த 21 வயது இளைஞர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் பொதுவாக காணப்படும் இந்த குரங்கம்மை பாதிப்புகள், தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
குரங்கம்மை நோய் பாதிப்புகளுக்கு ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளில் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் , ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் அடுத்தடுத்த இரண்டு குரங்கம்மை நோய் பாதிப்பு இறப்புகள் பதிவாகின.
இந்தநிலையில், கடந்த ஜுலை 21ம் திகதி குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு வந்த 22 வயது இளைஞர் ஜூலை 27 அன்று கடுமையான சோர்வு மற்றும் மூளைக்காய்ச்சலுடன் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞர்களுக்கு குரங்கு காய்ச்சலுக்கான வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும், ஆலப்புழா வைராலஜி ஆய்வகத்தில் இருந்து அவரது உடல் திரவங்களின் ஆய்வக சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ள கருத்தில், உயர்மட்ட குழு இந்த வழக்கை விசாரிக்கும் என்றும், குரங்கு காய்ச்சலில் உயிரிழப்பது என்பது அரிதானது, அதுவும் 22 வயது இளைஞன் இந்த வழக்கில் உயிரிழந்து இருப்பது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும், மற்றும் ஜூலை 21ம் திகதி இளைஞர் கேரளா வந்தாலும் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து குறிஞ்சியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சுகாதாரத் துறையினர் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.