இந்தியாவில் வறுமையால் வாடும் 22 கோடி குழந்தைகள்!

October 27, 2022 at 7:09 am
pc

‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற குழந்தைகள் உரிமை அமைப்பும், பிரசல்ஸ் நகரில் உள்ள விரிஜே பல்கலைக்கழகமும் இணைந்து குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், உலகம் முழுவதும் 77 கோடியே 40 லட்சம் குழந்தைகள், வறுமையாலும், பருவநிலை நிகழ்வுகளாலும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

உலக அளவில், கம்போடியாவில் வசிக்கும் குழந்தைகள்தான் வறுமை, பருவநிலை தாக்கம் என இரட்டை அச்சுறுத்தலை சந்திப்பவர்களில் முதலிடத்தில் உள்ளனர். அங்கு 72 சதவீத குழந்தைகளும், மியான்மரில் 64 சதவீத குழந்தைகளும், ஆப்கானிஸ்தானில் 57 சதவீத குழந்தைகளும் இந்த இரட்டை அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 51 சதவீதம்பேர், அதாவது 22 கோடியே 20 லட்சம் குழந்தைகள், வறுமையிலும், பருவநிலை நிகழ்வுகளின் பிடியிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தியாவில், 35 கோடியே 19 லட்சம் குழந்தைகள், ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு பருவநிலை நிகழ்வால் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. கேரளா, அசாம் போன்ற மாநிலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கும், ஒடிசாவில் வீசும் புயலும் எண்ணற்ற குழந்தைகளை வறுமையில் தள்ளி இருப்பதாக கூறியுள்ளது. உயர் வருவாய் நாடுகளிலும் 12 கோடியே 10 லட்சம் குழந்தைகள் இந்த அச்சுறுத்தலில் வாழ்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website