இந்தியாவை உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு: 11 ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை!
இந்திய நாட்டையே உலுக்கிய கோத்ரா பாலியல் வழக்கில் 11 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது, இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணான பில்கீஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது கண் முன்பே அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
இந்திய நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008ம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இதனை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. 15 ஆண்டுகள் கோத்ரா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரும், தங்களை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர்.
அவர்களது தண்டனை குறைப்பை பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில், 11 ஆயுள் தண்டனை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட பெண் பில்கீஸ் பனோ கருத்து தெரிவிக்காத நிலையில் அவர் கணவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், இந்த உத்தரவு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. இது என்ன மாதிரியான நீதி அமைப்பு என்று எங்களுக்குத் தெரியவில்லை என காட்டமாக கூறியுள்ளார்.