இந்தியா்களை பார்த்தாலே வெறுப்பா இருக்கு… இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்திய அமெரிக்க பெண்

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்தியப் பெண்களை மெக்சிகோவை சேர்ந்த அமெரிக்கன் பெண் ஒருவர் இன ரீதியாக வசைபாடி, அவர்களை தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது டல்லாஸ் நகரம். இங்கு இந்தியாவை சேர்ந்த நான்கு பெண்கள் ஒர் உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு கார் பார்க்கிங் லாட்டில் நின்றனர். அப்போது அங்கு வந்த மெக்சிகோவை சேர்ந்த அமெரிக்க பெண் ஒருவர் நால்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்பெண், “இந்தியர்களை பார்த்தாலே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக்கொள்ள இந்தியர்கள் எல்லோரும் அமெரிக்காவுக்கு வந்துவிடுகிறார்கள். நான் எங்கு சென்றாலும் இந்தியர்கள் தான் இருக்கின்றனர். உங்கள் இந்தியாவில் சிறப்பே இல்லையா? ஏன் நீங்கள் எல்லோரும் இங்கே வருகிறீர்கள் என்று கேட்கிறார். மேலும், நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கே திரும்பிப் போங்க என்று கூறியுள்ளார். பேச்சின் நடுவே ஆபாசம் கலந்த ஆங்கில வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளார். பின்னர் அப்பெண் இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதலை நடத்தியுள்ளார்.இந்த சம்பவம் கடந்த புதன் கிழமை நடந்தது. தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
பின்னர் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட நிலையில்,இந்திய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய பிளானோவின் எஸ்மரால்டா அப்டனைக் கைது செய்த பிளானோ நகர போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மேலும், அவர் மீது தாக்குதல், உடல் காயம் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.