இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் வழங்கிய ராணுவ வீரர்!!

May 22, 2022 at 1:28 pm
pc

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் வழங்கியதாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரில் உள்ள ராணுவத் தளத்தில் பிரதீப் குமார்(24) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணொருவரிடம் பழகி வந்துள்ளார்.

குறித்த பெண், மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், தற்போது பெங்களூரில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் பிரதீப்பிடம் கூறியுள்ளார். இவர்களின் பழக்கம் ஒரு மாதத்தை கடந்தபோது, குறித்த பெண் தனது காதலை பிரதீப்பிடம் கூறியுள்ளார். பிரதீப்பும், அவரது காதலை ஏற்றுக் கொள்வதாக கூறியதைத் தொடர்ந்து, இருவரும் பேஸ்புக்கிலேயே பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பெண் தனது தோழிகளிடம் காண்பிக்க வேண்டும் எனக் கூறி பிரதீப் குமாரிடம் இந்திய ராணுவத்தின் ரகசிய கோப்புகளை கேட்டுள்ளார். அவரது பேச்சை நம்பிய பிரதீப், தனது செல்போனில் ராணுவ ரகசியம் அடங்கிய கோப்புகளை புகைப்படம் எடுத்து, அவற்றை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் சைபர் கிரைம் பொலிஸார் ஒரு முறை பேஸ்புக் தொடர்பில் குற்றம் ஒன்றை விசாரித்தனர். அப்போது பாகிஸ்தானில் இருந்து ஒரு சிக்னல் வந்ததை கண்டுபிடித்தனர். அந்த பேஸ்புக் கணக்கை அவர்கள் ஆராய்ந்தபோது, பாகிஸ்தான் பெண் உளவாளி குறித்து தெரிய வந்தது. 

அவர் தான் பிரதீப் குமாரை ஏமாற்றி பல ராணுவ ரகசியங்களை பெற்றுள்ளார் என்பது பொலிஸாருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, ராணுவ அதிகாரிகளிடம் இதுகுறித்த விவரங்களை தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர்களின் அனுமதியைப் பெற்று பிரதீப் குமாரை கைது செய்த பொலிஸார், அவரிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அவர் 10க்கும் மேற்பட்ட ராணுவ ரகசியங்களை அப்பெண்ணுக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website