இந்த 2 பொருளை நைட் ஒரு டம்ளர் நீரில் ஊற வெச்சு காலையில குடிச்சா, உடல் எடை வேகமா குறையும் தெரியுமா..?
தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தால் ஏராளமானோர் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். உடல் எடை அதிகரித்தால் அதைக் குறைப்பது என்பது மிகவும் கடினம். அந்த கஷ்டம் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு தான் தெரியும். நிறைய பேர் உடல் எடையைக் குறைக்க டயட் இருக்கிறார்கள். டயட்டில் இருப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. டயட்டில் இருக்கும் போது சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதோடு, தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
மேலும் உடல் எடையைக் குறைக்க பல்வேறு பானங்களும் உதவி புரிகின்றன. இதுவரை நீங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும் ஏராளமான பானங்களைக் குறித்து படித்திருப்பீர்கள் மற்றும் அவற்றை முயற்சி செய்தும் பார்த்திருப்பீர்கள். ஆனால் இஞ்சி மற்றும் கொத்தமல்லி கொண்டு தயாரிக்கப்படும் பானம் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவி புரியும். அதற்கு ஆரோக்கிய உணவுப் பழக்கத்துடன், உடற்பயிற்சிகளை தவறாமல் மேற்கொண்டு, அந்த பானத்தை தினமும் குடித்து வர வேண்டும்.
இப்போது இந்த பானத்தை எப்படி தயாரிப்பது மற்றும் அது எப்படி உடல் எடையைக் குறைக்க உதவி புரிகிறது என்பதையும், அந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும் என்பதையும் விரிவாக காண்போம்.
இஞ்சி மற்றும் கொத்தமல்லி :
சமையலறையில் காணப்படும் பொதுவான பொருட்கள் தான் இஞ்சி மற்றும் கொத்தமல்லி. இந்த இரண்டு பொருட்களுமே ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளதால், அது நாட்டு மருத்துவத்தில் பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவ பண்புகளை அதிகம் கொண்ட இவ்விரு பொருட்களையும் ஒன்றாக எடுக்கும் போது, அது உடல் எடையைக் குறைக்க உதவுவதைத் தவிர, உடலுக்கு பல நன்மைகளையும் வழங்குகிறது.
எடை குறைப்பில் இஞ்சியின் நன்மைகள் :
இஞ்சி சாற்றினை காலையில் எழுந்ததும் குடிக்கும் போது, அது உடலில் தேங்கியுள்ள கெட்ட நீரைக் குறைக்க உதவுவதோடு, நல்ல செரிமானத்திற்கும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. ஒருவரது செரிமான செயல்முறையும், உடலின் மெட்டபாலிசமும் சிறப்பாக இருந்தால், தானாகவே உடலில் உள்ள கொழுப்புக்களும், அதிகப்படியான எடையும் குறைய ஆரம்பிக்கும்.
எடை குறைப்பில் கொத்தமல்லியின் நன்மைகள் :
ஒருவரது செரிமான மண்டலம் பிரச்சனையின்றி சிறப்பாக செயல்பட்டால், அதுவே உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். அந்த வகையில் கொத்தமல்லி செரிமான நொதி மற்றும் சாறுகளின் உற்பத்தியை தூண்டிவிட்டு, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, உண்ணும் உணவுகளை திறம்பட ஜீரணிக்கிறது. மேலும் மல்லியில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது.
இஞ்சி-மல்லி நீரைத் தயாரிப்பது எப்படி?
- 1/2 இன்ச் இஞ்சி மற்றும் 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை ஒரு டம்ளர் நீரில் போட வேண்டும்.
- இரவு முழுவதும் நீரில் அப்பொருட்களை ஊற வைக்க வேண்டும்.
- மறுநாள் காலையில் அந்த நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
- பின் அந்நீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.
இஞ்சி-மல்லி நீரை எப்போது குடிக்க வேண்டும்?
இஞ்சி-மல்லி நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அந்நீரில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைத்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைய ஆரம்பித்து, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
ஆனால் இந்த நீரால் சிறப்பான பலன் கிடைக்க வேண்டுமானால், ஆரோக்கியமற்ற உணவுகளை முழுமையாக தவிர்த்து, தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அப்படி செய்தால் தான் நல்ல பலன் விரைவில் கிடைக்கும். முக்கியமாக ஒருவர் தங்கள் உணவு முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முன் ஒரு நிபுணரை அணுக வேண்டும் என்பதை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்