இயற்கை தரும் இளமை வரம்! சுருக்கத்தைப் போக்கும் மாதுளை முத்து!

May 23, 2022 at 12:19 pm
pc

எல்லா சீசனிலும் கிடைக்கிற மாதுளம்பழத்தில் இருப்பது அத்தனையும் சத்து! கூந்தலை வளப்படுத்துவதுடன் அழகுக்கும் கை கொடுக்கும் மாதுளையின் மகத்துவத்தை பார்ப்போம்..

சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு.

புளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும்.

3 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் துவரம் பருப்பு இரண்டையும் முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதை வைத்து தலையை அலச வேண்டும்.

இப்படி தொடர்ந்து 10 நாட்கள் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று வளர ஆரம்பிக்கும்.

வியர்வையால் உடல் துர்நாற்றம் வீசுகிறதா? மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும்.

ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.

சிலருக்கு திறக்கவே முடியாத அளவுக்கு கண் பொங்கிவிடும்.. இமைகளும் உதிர்ந்து விடும். இதற்கு ஒரு மாதுளம்பழத்தை நான்காக வெட்டி, அதில் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, ஆற வைத்துக் கிடைக்கிற தண்ணீரால் கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும்.

சருமத்தின் சுருக்கத்தைப் போக்குவதிலும் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு! மாதுளம்பழ விழுதையும் வெண்ணெயையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டைத் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும்.

பருக்களை மறைய வைப்பதில் மாதுளைக்கு நிகர் மாதுளையேதான். மாதுளம்பழத்தை உதிர்த்து ப்ரீசரில் வைத்துவிடுங்கள். பத்து நாட்கள் கழித்து அதை எடுத்தால் நன்றாக விறைத்துப்போய் உடைக்க சுலபமாக இருக்கும். இதை பவுடராக்க வேண்டும்.

ஒரு டீஸ்பூன் இந்த பவுடருடன் ஒரு டீஸ்பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும். குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

பருவே வராமல் தடுக்கும் மந்திரமும் மாதுளைக்கு இருக்கிறது. ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ§டன் ஒரு டீஸ்பூன் வெட்டிவேர் பவுடர் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவி வந்தால், பருக்கள் உங்களை நெருங்க யோசிக்கும்!

நினைவாற்றலை பெருக்கும் மாதுளை!

மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால்பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல.. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கடுமையான சீத பேதியால் அவதிப்படுகிறவர்களுக்கு அருமருந்து மாதுளைதான். மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு.. இதில் ஏதாவது ஒன்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.

கல்கண்டு, பனீர், தேன், மாதுளம்பழச் சாறு நான்கையும் தலா ஒரு டம்ளர் எடுத்து, கலந்து, உருட்டுப்பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற சரும நோய்கள் மறைந்து, சருமத்தை விட்டே விலகும்.

மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும்.

“மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.

இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது.மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது.

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.

மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது.மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும்.

சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம்பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.

மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கி விடும். நீடித்த இருமல் குணமாகும்.

துவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து புண்களின் மீது போட்டு வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும். மாதுளம் மரப்பட்டையை கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் ஆடும் ‘பற்கள் கெட்டிப்படும். ஈறுகளின் நோய் தீரும். பற்களின் வலி குறையும். மாதுளை ஒரு பல்முனை நிவாரணியாகப் பயன்படுகிறது.

மாதுளம்பூச் சாறு 2 தேக்கரண்டியுடன் கற்கண்டைப் பொடிசெய்து சேர்த்து காலை மாலை தொடர்ந்து உட்கொள்வதால் சூட்டினால் ஏற்படும் ஆசனக் கடுப்பு, வயிற்றுக்கடுப்பு, மலம் கழித்தபின் எரிச்சல், மூலம் ஆகியவை ஒழியும். பத்துப் பூக்களை ஒரு குவளை நீரில் கொதிக்கவைத்து பாதியாகச் சுண்டுமளவுக்குக் காய்ச்சி கற்கண்டு சேர்த்துக் குடித்தாலும் இதே பலன் கிட்டும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website