இளையோரே எச்சரிக்கை… ஆன்லைனில் வேலை தேடுவோரை குறிவைத்து பண மோசடி! வடமாநில இளைஞர்கள் கைவரிசை!
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் லட்சுமி நகரை சேர்ந்தவர் சக்தி நாதன் என்பவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, வேலை இல்லாத காரணத்திற்காக Naukri என்ற இணையதளத்தில் வேலைக்காக பதிவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதில் இருந்து சக்தி நாதன் என்பவருடைய முகவரியை பெற்று போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக சொல்லி போலியான அப்பாயின்மென்ட் ஆர்டர் தயார் செய்து, மின் அஞ்சல் மூலம் அனுப்பி நம்பவைத்து, சுமார் ரூ.7 லட்சத்து14,035 மோசடி செய்து ஏமாற்றி உள்ளனர். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த சக்திநாதன் 2 மாதங்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்துத 11 பேர் கொண்ட குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்
இதில் புது டெல்லியைச் சேர்ந்த பிரம்ம பிரகாஷ் என்பவருடைய மகன் நவீன்குமார் மற்றும் ராம் சஜீவன் என்பவருடைய மகன் குரூப் சந்து ஆகிய இருவரையும் கைது செய்து மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி செங்கல்பட்டு மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுமக்கள் யாரும் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் சிக்காமல் இருக்க விழிப்புடன் இருக்கவேண்டும், இதுபோன்று இணையதளத்தில் வரும் போலியானா வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி யாரும் முன்பணம் தரவேண்டாம் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.