உங்கள் வீட்டில் உள்ள தங்க, வைர ஆபரணங்களை பராமரிப்பது எப்படி?
தங்க நகைகளின் மீது ஆர்வம் இல்லாதவர்களே கிடையாது. அதேபோல், சிலருக்கு வைர நகைகளின் மீதும் அதே ஆர்வம் உண்டு. மேலும், சிலருக்கு சில்வர் அதாவது வெள்ளி நகைகளின் மீது. ஆனால், இந்த வகையான ஆபரணங்களை வாங்கிவிட்டால் மட்டும் போதாது. அதன் மதிப்பு அதை பராமரிப்பதில் தான் இருக்கிறது. காற்று, தூசு, அழுக்கு ஆகியவற்றால் நாம் தினமும் அணியும் அனைத்து வகையான ஆபரணங்களும் எளிதில் மங்களாக மாறிவிடும். இதற்காக எல்லா நேரமும் நீங்க கடைகளில் கொடுத்து மெருகு போட வேண்டி இருக்கும். ஆனால், ஜொலிக்கும் நகைகளை எப்போதும் ஜொலிப்பாகவே வைத்துக் கொள்ள இதோ சில டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றி உங்களுடைய விலையுயர்ந்த ஆபரணங்களை எப்போது புதிது போல வைத்துக் கொள்ளுங்கள்.
வைர நகைகள்:
வைர நகைகளை பொறுத்த வரையில், குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்யாமல் விட்டால் அதன் பொலிவு குறைந்துவிடும். எனவே, அடிக்கடி வைர நகைகளை சுத்தம் செய்வது ரொம்பவே முக்கியம்.
வைர நகைகளை சுத்தம் செய்ய, ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எதையும் கலக்க வேண்டாம். பின்னர், அந்த நீரில் உங்களுடைய வைர நகைகளை ஒரு 15 நிமிடங்கள் ஊற வையுங்கள்.
ஒரு மென்மையான பிரஷ், நாம் நாள்தோறும் பல்துலக்க பயன்படுத்தும் பிரஷ் அல்லது பேபி பிரஷால் வைர நகைகளை தேய்க்கவும். பின்பு, அதை மீண்டும் வெதுவெதுப்பான தண்ணீரில் அலசிவிடுங்கள்.
ஒரு காட்டன் துணியால் நகையை நன்றாக துடைத்து காய வைத்து, பின்ன நகை டப்பாவில் பாதுகாப்பாக எடுத்து வையுங்கள். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அல்லது இருமுறை இதைப் பின்பற்றுங்கள்.
சில்வர் நகைகள்:
சில்வர் நகைகள் எளிதில் கருப்பாகி விடும். அதை எப்போதும் பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அடிக்கடி கழுவ கூடாது. ஏனெனில், அதன் தன்மை மங்களாக ஆரம்பித்துவிடும்.
எனவே, மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்தால் போதுமானது. ஒவ்வொரு உடல் சூட்டை பொறுத்து வெள்ளி நகைகள் கருத்துவிடும். எனவே, அதையும் கருத்தில் கொள்ளுங்கள்.
இப்போது, ஒரு பிரஷில் சிறிதளவு நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டை சிறிதளவு போட்டு, வெள்ளி நகைகளை தண்ணீரில் நனைத்துக்கொண்டு மெதுவாக தேய்க்கவும்.
பின்னர், வெதுவெதுப்பான தண்ணீரில் நன்றாக கழுவி, துணியால் துடைத்து விடுங்கள். அப்புறம் பாருங்க உங்க நகையை சும்மா புதிப்போல் ஜொலிக்கும்.
தங்க நகைகள்
நாம் தினந்தோறும் பயன்படுத்தும் தங்க செயின்கள், வளையல்கள், தோடு, மோதிரங்கள் போன்றவற்றை சுத்தம் செய்ய, வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு சொட்டு பேபி ஷாம்பூ சேர்த்து கலக்கி, அதில் நகைகளை ஊறவையுங்கள்.
பின்னர், பிரஷ் கொண்டு நகைகளை மெதுவாக தேய்க்கவும். ரொம்ப அழுத்தி தேய்க்க வேண்டாம், அப்படி செய்தால் நகையின் டிசைன் பழுதாகிவிடும். எனவே, மிகவும் மென்மையாகவும் கவனமாகவும் தேய்த்து, தண்ணீரில் கழுவிடுங்க.
அப்புறம், காட்டன் துணியால் நன்றாக துடைத்து, காய வைத்து அந்தந்த நகைகளுக்கு ஏற்ற நகை டப்பாக்களில் போட்டு வைக்கவும்.