உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு 24 வயது காவலர் மரணம்!!

இந்திய மாநிலம் தெலங்கானாவில் இளம் காவலர் ஒருவர், உடற்பயிற்சியின்போது கீழே விழுந்து சுருண்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 வயது காவலர்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள போவென்பள்ளியைச் சேர்ந்தவர் விஷால் (24). இவர் ஆசிப் நகர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வந்தார்.
உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்த விஷால், இன்று உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அவர் கீழே சரிந்து விழுந்தார். இதனால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதிர்ச்சி மரணம்
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஷால் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக இறந்திருக்கலாம் என அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், காவலர் விஷால் சரிந்து விழுந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.