உதவியது எல்லாம் போதும் – கோத்தபயவுக்கு உதவ மறுத்த இந்தியா!
நம் அண்டை நாடான இலங்கையில் ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. கோத்தபய ராஜபக்சே இலங்கையிலிருந்து தன் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு தப்பி ஓடிவிட்டார். பின் தன் பதவியை ராஜினாமா செய்தார்.பொதுமக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த நிலையில், இலங்கையில் இருந்தால் பிரச்னை வரும் எனக் கருதி, கோத்தபய வெளிநாட்டுக்கு தப்பிக்க பல முயற்சிகளை செய்துள்ளார். முதலில் அமெரிக்கா செல்ல தனக்கும், தன் குடும்பத்திற்கும் ‘விசா’ கேட்டார். இவர் அமெரிக்க பிரஜையாக இருந்தவர். ஆனால், 2019 தேர்தலில் போட்டியிட தன் அமெரிக்க குடியுரிமையை வேண்டாம் என ரத்து செய்துவிட்டார்.
இவருடைய குடும்பம் அமெரிக்காவில் வசிக்கிறது. இதனால் தனக்கு சுலபமாக அமெரிக்க விசா கிடைத்துவிடும் என நம்பினார். ஆனால் அமெரிக்கா மறுத்துவிட்டது. இதையடுத்து இந்தியாவிடம் உதவி கேட்டார். இலங்கை விமான படை விமானத்தில் தான் வருவதாகவும், வட மாநிலங்களில் எங்காவது தன் விமானம் தரையிறங்க அனுமதி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஆனால் பிரதமர் மோடி மறுத்து, ‘இலங்கை மக்களுக்கு இந்தியா உதவும்’ என சொல்லிவிட்டார். இதன்பின் தான் கோத்தபய மாலத்தீவுக்கு சென்று, பின் சிங்கப்பூருக்கு தப்பினார்.