உலக சாதனை படைத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்!
105 மணி நேரத்தில் 75 கி.மீ நீள சாலையை அமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், நெடுஞ்சாலையின் படத்தையும்,கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழையும் பகிர்ந்துள்ளார்.
மராட்டியத்தில் அமராவதி முதல் அகோலா வரையிலான என்எச்-53 இல் இடைவிடாமல் பணியாற்றி 75 கி.மீ நீளமுள்ள தொடர்ச்சியான சாலையை 5 நாட்களுக்குள் அமைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உலக சாதனை படைத்துள்ளது. அமராவதி-அகோலா நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணி சனிக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி நேற்று நிறைவடைந்தது.
இந்த என்எச்-53 நெடுஞ்சாலை கொல்கத்தா, ராய்பூர், நாக்பூர், அகோலா, துலே மற்றும் சூரத் ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கிறது. இதற்கு முன்பு, 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி பொதுப்பணித்துறை ஆணையம் (கத்தார்) கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. இந்த சாலை அல்-கோர் விரைவுச் சாலையின் ஒரு பகுதியாக இருந்தது,மேலும் பணியை முடிக்க 10 நாட்கள் வரஒ ஆனதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.