ஊக்கமருந்து விவகாரம்: ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு 2 ஆண்டுகள் தடை!
சர்வதேச போட்டிகளில் பங்குபெறும் தடகள வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்படுவது வழக்கம். அப்படி நடத்தப்படும் சோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு குறிப்பிட்ட காலம் தடை விதிக்கப்படும்.
அண்மையில் கூட ஊக்க மருந்து பயன்படுத்தியதாக இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்துக்கு தடை விதிக்கப்பட்டது. அவர் சர்வதேச போட்டிகளில் பங்கு பெற சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை தடை விதித்துள்ளது.
அந்த வகையில், தற்போது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியுள்ளார். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த தீபா கர்மாகர், 2016ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் 4ஆம் இடத்தை பிடித்தவர்.
இந்தியா சார்பாக பங்கேற்ற முதல் பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை என்ற பெருமையையும் இவர் பெற்றார். இந்நிலையில், ஊக்கமருந்து விவகாரத்தில் தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் தடை விதிக்கப்பட்டதை சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் உறுதி செய்துள்ளது.
வரும் ஜூலை 10ஆம் தேதி வரை இந்த தடை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபா கர்மாகருக்கு 2016ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும், 2017ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.