எங்களுக்கு உதவுங்கள் – இந்தியாவின் உதவியை நாடும் உக்ரைன்!

June 5, 2022 at 6:37 am
pc

ரஷ்யாவின் தற்போதைய போர் தாக்குதல் நிறைவடைந்த பிறகு, உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பெற வேண்டும் என உக்ரைன் இந்தியாவை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா போரானது கிட்டத்தட்ட 100 நாள்களை கடந்து தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், உக்ரைனின் பெரும்பாலான உள்கட்டமைப்புகளை ரஷ்ய ராணுவம் முழுவதுமாக அழித்துள்ளது.

ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022ம் ஆண்டு மட்டும் 20% முதல் 30% வரை சரிந்து இருப்பதாகவும், நாட்டின் பணவீக்கம் 20% சதவிகிதம் வரை அதிகரித்து இருப்பதாகவும் உக்ரைனின் ராஜதந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், ரஷ்யாவின் அத்துமீறிய தாக்குதல் நிறைவடைந்த பிறகு, உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைய வேண்டும் என உக்ரைன் இந்தியாவை அணுகி இருப்பதாக அந்த நாட்டின் ராஜதந்திர அதிகாரி இந்திய செய்தி நிறுவனமான தி இந்து பத்திரிக்கைக்கு அளித்த தகவலில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் போருக்கு பிறகான உக்ரைனின் மீள்கட்டமைப்பில் இந்தியா தீவிரமாக செயல்படும் என எதிர்பார்ப்பதாகவும், அதிகமான மனிதாபிமான உதவிகள், கூடுதல் மருத்துவ உதவிகள், சில தொழில்நுட்ப மற்றும் பொருளாதார உதவிகளை இந்தியா முன்னெடுக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக ராஜதந்திர அதிகாரி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இந்தியாவின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கிட்டத்தட்ட 230 டன்கள் அளவிலான உதவிகளை உக்ரைன் பெற்று இருப்பதாகவும், அவற்றில் பெரும்பாலும் இந்தியாவை தலைமை இடமாக கொண்ட உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களின் அலுவலகங்களில் இருந்து அதிக உதவிகளை கிடைக்க பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website