என்ன கத்தரிக்காய் கூட மருந்தாகுமா..? இவ்ளோ நாள் தெரியாமல் போச்சே …..!!
அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் இடம்பெறுவதாயிற்றே! இதனால் பலவித சத்துக்கள் கிடைக்கும். சரி…இதெப்படி மருந்தாகும். இப்படிப் பலரும் யோசிக்கலாம். ஆனால் சித்தர்கள் இதனை மிகுந்த மரியாதையுடன் “பத்தியக்கறி” என்றல்லவா அழைத்துள்ளனர். அது மட்டுமா, லிங்கம்(Arsenic) போன்ற பாஷாணங்களை ‘கட்டு மருந்தாக்க’ கத்திரிக்காயை அல்லவா பயன்படுத்தியுள்ளனர். இதை விட பெரிய விஷயம் ஏதாவது இருக்க முடியுமா?.
வேறெந்த காயை மறந்தாலும் கத்தரிக்காயை யாரும் மறக்க மாட்டார்கள். குள்ளச்செடி வகைகளில் கத்தரிச்செடியும் ஒன்று. முள்ளுடன் கூடியது, முள்ளில்லாமல் நீளமாகக் காய்க்கும் கத்தரி என இருவகையுண்டு.இனி கத்திரிக்காயை எவ்வாறெல்லாம் பயன்படுத்தி நன்மை பெறலாம் என்பதைப் பார்ப்போம்.
1). பத்திய உணவிற்கு ஏற்ற காய். தினமும் சாப்பிட்டாலும் அதனால் கெடுதல் ஏற்படாது. உடலுக்குச் சூட்டினைத் தந்து வலிமையைத் தரக்கூடியது. தாதுபலம் பெருகும். பித்தம், கபம் ஆகியவற்றை தணித்து வாயுவையும் வெளியேற்றும்.
(2). ஆஸ்துமா, ஈரல்நோய், காசம் போன்ற தீவிரமான நோயுற்றவர்களுக்கு எப்போதும் வலிமை தரக்கூடிய காய் கத்தரிக்காய்.
நெய் விட்டு வதக்கி குழம்பு பதம் அல்லது மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து பொரியலாக செய்து உண்டு வர மேற்கூறிய நோய்கள் கட்டுப்படுத்தப்படும்.
(3). சரும நோய் உள்ளவர்கள் கத்திரிக்காயை உபயோகப்படுத்தக்கூடாது. சரும நோய்க் காரணிகளை அபிவிருத்தி செய்விக்கும் குணம் இதற்குண்டு. சரும நோய் தவிர எந்த நோய்க்கும் பிஞ்சுக் கத்திரிக்காயைப் பத்தியக்கறியாகப் பயன்படுத்தலாம்.
(4). இவற்றை வற்றல் போல செய்து வைத்துக்கொண்டு, குளிர் காலத்தில் அவ்வப்போது நல்லெண்ணெயில் பொரித்து உண்டு வர, உடலுக்குத் தேவையான உஷ்ணம் போதுமான அளவு கிடைக்கும்.
(5). தாதுபலமின்றி, சுக்கிலம் தீர்ந்து போய், அதன் காரணமாக இல்லற வாழ்வில் சோர்வு அடைந்தவர்கள், கத்தரிக்காயை உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்காய், வெங்காயத்துடன் சேர்த்து தினசரி உணவில் உண்டு வர சுக்கிலம் பலம் பெறும். உடலுறவில் போதிய திருப்தி ஏற்படும்.
தமிழர்களின் திருமணச் சடங்குகளில் கூட மூலிகைகளின் ஆதிக்கம் இருப்பதை சாந்தி முகூர்த்தத்தன்று, மணமக்களுக்கு இரவு உணவாக கத்தரிக்காயைச் சமைத்து அளிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. புதுமணத் தம்பதிகள் புதிதாக இல்லற ஈடுபாட்டில் அடியெடுத்து வைக்கும் அந்நாளில், கத்தரிக்காயை உணவாக அளிப்பதன் இரகசியம் என்வெனில், அது இல்லறச் சோர்வை நீக்கி உடலுறவில் நாட்டம் கொள்ளச் செய்யும்.
(6). பல்வேறு கிருமிகளின் தாக்கம் காரணமாக வலப்பக்க ஈரல் வலிமை குன்றியவர்கள், கத்தரிக்காய் வற்றல், குழம்பு ஆகியன உண்டு வர, ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கி, புத்துணர்வு பெறுவர்.
(7). கத்தரிப்பழத்தை ஊசியினால் குத்தி நல்லெண்ணெயில் வதக்கி, மிளகுத்தூள், உப்பு தூவி உண்டு வர பல் நோய்கள், அஜீரணம் ஆகியன நீங்கும். வாய்வுக் கோளாறு மற்றும் பித்தம் விலகும்.
கட்டுமருந்து’ என்பது சித்த மருத்துவத்தில் அரிய முறையாகும். இம்மருந்துகளுக்கு காலாவதி தேதி (Expiry Date) என்பதே கிடையாது. வீரியப்பட்ட கட்டுமருந்தான, நவபாஷாணங்களில் ஒன்றான ‘லிங்கத்தை’க் கட்டுமருந்தாக்கும் திறன் கத்தரிக்காய்க்கு உண்டு. கத்தரிப் பழத்தினுள் சுத்தி செய்த லிங்கத்தை வைத்து, மூன்று மண் சீலை செய்து, ‘காடை’ அளவு 100 முறை புடமிட, லிங்கம்கட்டுப்பட்டு, ‘லிங்கக் கட்டாக’ மாறும். இதனை ஜன்னி போன்ற காய்ச்சலுக்கு மருந்தாக அக்காலத்தில் பயன்படுத்தி வந்தனர்.
(9). கத்தரிச் செடியின் வேரை சாதாரணமாகத் தலைக்கு எண்ணெய் ஸ்நானம் செய்ய உதவும் தைலங்களுக்குப் பயன்படுத்தலாம்.
(10). மனிதர்களுக்கு மட்டுமின்றி மாடுகளுக்கு வரும் வயிற்று வலி, வயிற்றுப் புழுக்கள், வயிறு உப்புசம் ஆகியவற்றிற்கு, கத்தரிக்காயை கும்பி தணலில் சுட்டு சிறிது பெருங்காயம் கூட்டி மாடுகளுக்கு புகட்ட குணமாகும்.
சரும நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குன்மம் போன்ற வயிற்றில் புண்ணுடையவர்கள் கத்தரிக்காயை எப்போதும் உபயோகப்படுத்தக் கூடாது.
‘மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது’ என்ற பழமொழிக்கேற்றார் போல், ‘கத்தரிக்காய் அளவுக்கு இருந்துவிட்டு பேச்சைப் பார்’ என்று கிண்டல் செய்யும் அளவிற்கு இருந்தாலும் இந்தக் கத்தரிக்காய் இப்படிப் பல விதத்தில் பயன்படுவது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயமல்லவா? நாமும் அன்றாட உணவில் கத்தரிக்காயை உணவாக, மருந்தாக எடுத்துக்கொண்டு நலம் பெறுவோமே!