கடைசி பந்தில் டுவிஸ்ட்! சென்னையின் வெற்றியை தட்டிப்பறித்த வீரர்..வாகைசூடிய பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல்லின் 41வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
தெறிக்கவிட்ட கான்வே
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் CSK மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ஓட்டங்கள் குவித்தது.
டெவோன் கான்வே 92 ஓட்டங்களும், கெய்க்வாட் 37 ஓட்டங்களும் விளாசினர். பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பத்திலேயே அதிரடி காட்டியது. தவான் 28 ஓட்டங்களில் அவுட் ஆனத் தொடர்ந்து, அதர்வா 13 ஓட்டங்களில் வெளியேறினார்.
அதிரடி காட்டிய பஞ்சாப் வீரர்கள்
அதன் பின்னர் வந்த வீரர்கள் அதிரடியாக ஓட்டங்களை சேர்த்தனர். இதனால் சென்னை அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. எனினும், தேஷ்பாண்டே மிரட்டலான பந்துவீச்சில் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அவரது பந்துவீச்சில் லிவிங்ஸ்டன் 40 ஓட்டங்களிலும், ஜித்தேஷ் சர்மா 21 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். சாம் கரன் 29 ஓட்டங்கள் எடுத்து பதிரனா ஓவரில் அவுட் ஆனார்.
வெற்றி பெற வைத்த ராஸா
பஞ்சாப் அணிக்கு கடைசி பந்தில் 3 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பதிரனா வீசிய அந்த ஓவரை எதிர்கொண்ட ராஸா, வெற்றிக்கு தேவையான ஓட்டங்களை எடுத்தார். இதனால் சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு உயர்ந்தது. கான்வே ஆட்டநாயகன் விருதை பெற்றார்.