கணவனின் உயிரை காப்பாற்ற முதலையுடன் போராடிய பெண்ணின் தீரச் செயல்!
ராஜஸ்தானில் முதலையிடம் பிடிபட்ட தனது கணவரது உயிரை, போராடி மீட்ட பெண்ணின் தீரச்செயலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
முதலையிடம் பிடிபட்ட கணவர்
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள மந்தராயல் பகுதியில் பன்னே சிங் என்பவர் ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த செவ்வாயன்று பன்னே சிங்கும், அவரது மனைவி விமல் பாயும் தங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் எடுக்க ஆற்றுக்கு சென்றுள்ளனர்.
அப்போது ஆற்றில் இறங்கும்போது எதிர்பாராத விதமாக முதலை, பன்னே சிங்கின் காலை கடித்து தண்ணீருக்குள் இழுத்துள்ளது. அங்கிருந்த விமல் பாய் கணவரின் அலறல் சத்தம் கேட்டு பதறி அடித்து ஓடி வந்துள்ளார்.
உடனே அவர் அருகில் கிடந்த குச்சியை எடுத்து முதலையை அடித்துள்ளார். ஆனாலும் முதலை விடவில்லை, மெல்ல தண்ணீருக்குள் உடலை இழுத்து சென்றுள்ளது.
போராடி மீட்ட மனைவி
விமல் பாய் தைரியமாக முதலையின் கண்ணில் குச்சியால் தாக்கியுள்ளார். இதனால் முதலை தனது பிடியை விட்டு பன்னே சிங்கின் காலை விடுவித்துள்ளது.
பின் கணவனை ஆற்றுக்குள்ளிருந்து இழுத்து மீட்டு கரை சேர்ந்துள்ளார். அங்கம் பக்கத்திலிருந்த ஆட்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
பன்னே சிங்கிற்கு காலில் பலமாக காயம் ஏற்பட்டதால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு பின்பு விமல் பாய் பேசிய வீடியோ ட்விட்டரில் வைரலாகியுள்ளது.
அதில் “என் கணவரை முதலை கடித்த போது, நான் என் வாழ்க்கையை பற்றி சிந்திக்கவில்லை” என விமல் பாய் தெரிவித்துள்ளார்.
மேலும் இவரது தீரச் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. விமல் பாயின் சாகசத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.