கர்ப்பிணி பெண்ணை நடு ரோட்டில் வைத்து தாக்கிய கிராம மக்கள்

October 24, 2022 at 7:39 am
pc

வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரப்பட்ட பெண்ணின் கிராமத்தினர், கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் வைத்து தாக்கியதில் பெண்ணின் கர்ப்பம் கலைந்துள்ளது ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்துள்ள பழைய வீராபுரம் என்றார் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீ ஹரி. இவரும் வேறு பகுதியை சேர்ந்த லீலாவதி என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதல் விவகாரத்தை இரகசியாகவே வைத்திருந்தனர்.

ஆனால் ஒருநாள் இவர்களது காதல் விவகாரம், இவர்களது பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இருப்பினும் பிள்ளைகள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இவர்களது காதல் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் திருமணம் முடிந்து தனது மாமியார் வீட்டில் கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், லீலாவதிகர்ப்பமாக இருந்துள்ளார். இதனால் அவர்களது வீட்டில் லீலாவை கவனமாகவும், எச்சரிக்கையாகவும் பார்த்துக்கொண்டனர்.

சம்பவத்தன்று தனது பெற்றோர் வீட்டிற்கு செல்ல விரும்பிய லீலா, இது குறித்து கணவரிடம் கூறியுள்ளார். பின்னர், கணவரும், லீலாவும் சேர்ந்து லீலாவின் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கே லீலா வந்ததை அறிந்த கிராமத்தினர், அவரது வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர் வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்ட லீலாவை கண்டித்தனர்.

அதோடு, மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரை லீலா திருமணம் செய்துகொண்டதால், தங்கள் சமூகத்தின் விதிகளை மீறியதாகவும், அதனால் லீலாவின் குடும்பம் கிராமத்திற்கு அபராதம் செலுத்தும்படியும் அந்த கிராமத்தினர் ரூ 50 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இதனை 2 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

ஆனால் லீலாவின் குடும்பம் வறுமையானது என்பதால், அவர்களால் அந்த தொகையை செலுத்த முடியாது. எனவே, இது குறித்து கிராமத்தினரிடம் முறையிட்டனர்.

இருப்பினும் அவர்களது பேச்சை கேட்காத கிராமத்தினர், லீலாவின் குடும்பத்தினரை வசைப்பாடியுள்ளனர். இதனால் அங்கே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில், லீலா மற்றும் அவரது கணவரை அந்த ஊர் மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் கர்ப்பிணி என்றும் பாராமல் நடுத்தெருவில் இழுத்து வந்து லீலாவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே லீலாவின் கர்ப்பம் கலைந்துள்ளது.

இதையடுத்து லீலாவை மீட்ட அவரது உறவினர்கள், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் கிராமத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரப்பட்ட பெண்ணின் கிராமத்தினர், கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் வைத்து தாக்கியதில் பெண்ணின் கர்ப்பம் கலைந்துள்ளது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website