கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்-கைதான ஆசிரியைகள் 5 பேரின் விவாதங்கள்..நீதிபதியின் அதிரடி உத்தரவு!!

August 19, 2022 at 2:23 pm
pc

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13-ம் திகதி மர்மமான முறையில் இறந்தார். 

மாணவி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. பொலிசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28-ந் திகதி மனுதாக்கல் செய்தனர். 

இந்த ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே 3 முறை விசாரணைக்கு வந்தபோது 5 பேருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் நேற்று 4-வது முறையாக அவர்களின் ஜாமீன் மனுக்கள் மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) சாந்தி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அதில் கைதான ஐந்து பேர் சார்பில் முன்னுறுத்திய தகவலில், 4000 மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இது முழுக்க முழுக்க தற்கொலை, எங்களுக்கு இதில் தொடர்பில்லை என தெரிவித்தனர்.

மேலும் ஸ்ரீமதியின் உடலில் இருக்கும் காயங்களை வைத்து பாலியல் வன்புணர்ச்சியால் ஏற்பட்ட காயங்கள் என்று சொல்ல முடியாது.

இன்னும் சி.பி.சி.ஐ.டி. பொலிசாரின் விசாரணை முழுமை பெறவில்லை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவினரின் ஆய்வறிக்கையும் சமர்பிக்கப்படவில்லை. இவ்வழக்கில் கைதான 5 பேரும் போலீசாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள். 

சி.சி.டி.வி. வீடியோ பதிவுகளை வெளியிட்டு வழக்கை திசைதிருப்ப வேண்டிய அவசியம் எங்கள் தரப்புக்கு இல்லை, கனியாமூர் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு அவர்கள் 4 பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி சாந்தி, 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website