காதலனை கொன்று பெட்டியில் மறைத்து கொண்டு சென்ற பெண்!

August 10, 2022 at 10:59 am
pc

 உத்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் தன்னுடன் வாழ்ந்து வந்த காதலரை கொலை செய்து, பெரிய பெட்டியில் உடலை மறைத்து கொண்டு செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் திலா மோர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பெண்ணொருவர், பெரிய பெட்டி ஒன்றை டிராலியில் வைத்து இழுக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

இதனை கவனித்த ரோந்து பொலிசார், குறித்த பெண்ணை நிறுத்தி பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். அத்துடன் அவர் தப்பியோட முயன்றபோது அவரை மடக்கிப்பிடித்த பொலிசார், பெட்டியை திறக்குமாறு கூறியுள்ளனர்.

அதன் பின்னர் பெட்டியை திறந்து பார்த்தபோது, இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து குறித்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, அவர் துளசி நிகேதனில் வசிக்கும் தீபக் யாதவ் என்பவரின் மனைவி ப்ரீத்தி சர்மா என்று தெரிய வந்தது.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை பிரிந்த அவர், பிரோஸ் என்பவருடன் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த ஆகத்து 6ஆம் திகதி பிரோசுக்கும், ப்ரீத்தி சர்மாவுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ப்ரீத்தி கேட்டுள்ளார். ஆனால் திருமணத்தில் ஆர்வம் காட்டாத பிரோஸ், கணவனை விட்டு வந்த நீ எப்படி எனக்கு உண்மையாக இருப்பாய் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்து பிரோஸின் கழுத்தை அறுத்து ப்ரீத்தி கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து உடலை மறைக்க பெரிய பெட்டியில் அடைத்து கொண்டு செல்லும் வழியில் பொலிஸிடம் சிக்கியுள்ளார். பிரோசின் உடலை கைப்பற்றிய பொலிசார், ப்ரீத்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website