காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி… 3 வாலிபர்கள் விஷம் கொடுத்து கொலை!

May 24, 2022 at 12:32 pm
pc

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை 3 வாலிபர்கள் விஷம் கொடுத்து கொன்றதாக கூறப்படும் நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். 

திருச்சி மாவட்டம் நொச்சி வயல் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 52). இவரது மனைவி சாந்தி (48). இந்த தம்பதியின் மகள் வித்யாலட்சுமி (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 17-ந் தேதி வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு காரணமாக வித்யா லட்சுமி திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரது வயிற்றில் விஷம் கலந்து இருப்பதை கண்டுபிடித்தனர். 

இதுதொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் பாய்லர் ஆலை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து வித்யாலட்சுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது மாணவி கூறியதாவது:- கடந்த 11-ந் தேதி நான் கல்லூரி முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தேன். 

அப்போது, 3 பேர் என்னை வழிமறித்தனர். துவாக்குடியை சேர்ந்த ஒருவரின் 18 வயது மகன் என்னை காதலிப்பதாக கூறினான். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவனை செருப்பால் அடித்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டேன்.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி நான் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தேன்.

அப்போது, அந்த 3 பேரும் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு அருகில் உள்ள சந்துக்குள் சென்றனர். பின்னர் விஷம் கலந்த குளிர்பானத்தை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனர். இதில் இருந்துதான் எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் போலீசிடம் தெரிவித்தார். இதற்கிடையே திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வித்யாலட்சுமி நேற்று முன்தினம் மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website