காதலியை சரமாரியாக கத்தியால் குத்திய மெக்கானிக்… அதிர வைத்த காரணம்!

January 21, 2023 at 4:28 pm
pc

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பொதுப்பணித்துறை பணியாளர் குடியிருப்பில் வசித்து வருபவர் நஞ்சுண்டப்பன். இவருடைய மகன் சந்தோஷ் (வயது 32). இருசக்கர வாகன மெக்கானிக். 

பவானிசாகர் கூலிங் லைன் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவர், தற்காலிக திடக்கழிவு மேலாண்மை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அந்த பெண்ணும், சந்தோசும் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. 

இதற்கிடையே சந்தோஷ் காதலித்த பெண் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் நேற்று பகல் 11 மணி அளவில் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த தனது நண்பர் காந்தன் என்கிற காப்பர் காந்தன் (38) என்பவரை அழைத்துக்கொண்டு காதலி வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு சென்று அவரை வெளியே வரச்சொல்லியுள்ளார்.

வெளியே வந்த அந்த பெண்ணுக்கும், சந்தோசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் கன்னம், வலது தோள்பட்டை, விரல்கள், மணிக்கட்டு என பல இடங்களில் சரமாரியாக சந்தோஷ் குத்தினார். 

அப்போது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் வெளியே ஓடிவந்து, அந்த பெண்ணை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசையும், காப்பர் காந்தனையும் கைது செய்தனர்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website