குப்பைத் தொட்டியில் உடல் பாகங்கள்… தன்பாலின காதலனை கொலை செய்த பிரபல நடிகரின் மகன்
தாய்லாந்தில் பிரபலமான தீவு ஒன்றில் மனித உடல் பாகங்கள் உள்ளூர் மக்களால் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஸ்பெயின் நாட்டின் பிரபல நடிகரின் மகன் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
தன்பாலின காதலன் கொலை
தாய்லாந்தின் Ko Pha-ngan தீவில் வைத்து தமது தன்பாலின காதலனை கொலை செய்து, உடலை பல பாகங்களாக வெட்டி, மறைவு செய்துள்ளதாக இளம் YouTube சமையல் கலைஞர் ஒப்புக்கொண்டுள்ளார்.
குறித்த நபர் ஸ்பெயின் நாட்டின் பிரபல நடிகரான Rodolfo Sancho என்பவரின் மகன் Daniel Sancho என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் தமது காதலனான கொலம்பிய நாட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் எட்வின் அரியேட்டா ஆர்டீகா என்பவரையே கடந்த வாரம் புதன்கிழமை கொலை செய்துள்ளார்.
44 வயதான எட்வின் அரியேட்டா என்பவரின் உடல் பாகங்கள் வியாழக்கிழமை உள்ளூர் மக்களால் கண்டெடுக்கப்பட்டு, குறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 29 வயதான டேனியல் சான்சோ சுற்றுலா விசாவில் ஜூலை 31ம் திகதி தாய்லாந்தில் வந்திறங்கியுள்ளார்.
தற்போது தாய்லாந்து பொலிசாரிடம் உண்மையை ஒப்புக்கொண்ட அவர், பணம் மற்றும் பாலியல் உறவு தொடர்பில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக எட்வின் அரியேட்டாவை கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
14 துண்டுகளாக வெட்டி
எட்வின் அரியேட்டா உடலை கடலில் வீசும் முன்னர் 14 துண்டுகளாக வெட்டியுள்ளார். அத்துடன் எட்வின் அரியேட்டா மாயமானதாக பொலிசாருக்கும் புகார் அளித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், இந்த ஜோடி கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளதாகவும், இருவரும் தனித்தனியாக தாய்லாந்திற்கு வந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்து பொலிசார், எட்வின் அரியேட்டாவின் தலை மற்றும் கைகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள டேனியல் சான்சோ, திங்கட்கிழமை தாய்லாந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளார்.
அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. எட்வின் அரியேட்டாவை கொலை செய்துள்ளதை சான்சோ ஒப்புக்கொண்டதாகவும், உடல் பாகங்களை கடலிலும் தீவின் பல பகுதிகளில் குப்பைத் தொட்டிகளிலும் வீசியுள்ளதை அவர் தெரிவித்ததாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது எட்வின் அரியேட்டாவுடன் உறவுக்கு தாம் மறுத்ததாகவும், அந்த ஆத்திரத்தில் வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டதாகவும், இதனால் ஏற்பட்ட கோபத்தில் அவரை தாக்கியதில், அவர் சுருண்டு விழுந்தார் எனவும், இதில் தலையில் காயம்பட்டு, மரணமடைந்தார் எனவும் சான்சோ பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.