குளிர்காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனைகள் பற்றி தெரியுமா …?
குளிர்காலம் மற்றும் கோடை காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்பான பாதுகாப்பு தேவை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இருப்பினும், ஒரு சிலரின் அலட்சியம் காரணமாக குழந்தைகள் பெரும்பாலான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். அந்த வகையில், குளிர் காலத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
சிறு வயது குழந்தைகளைப் பராமரிப்பதில், மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும். இன்றைய நவீன உலகத்திலும், பெரும்பாலான தாய்மார்களுக்கு அவர்களின் குழந்தையைப் பராமரிக்கும் முறைகளில் தெளிவானப் புரிதல் இல்லாததால் பிறந்த குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதில் சிரமம் உண்டாகிறது. இதனால், குழந்தைகள் குளிர் காலத்தில் சளி, இருமல் போன்றவற்றால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு குளிர் காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை வர விடாமல் தடுக்க, வெது வெதுப்பான போர்வைகள், கம்பளி ஆடைகள் போன்றவற்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இருப்பினும், பிறந்த குழந்தைகளின் உடலைப் பராமரிப்பதில் மிகுந்த கவனம் தேவை. இதில், குளிர் காலத்தில் குழந்தைகளை எப்படி பாதுகாக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், என்னென்ன விஷயங்களை அடிக்கடி கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.
பிரச்சனைகள் & தீர்வுகள்
பொதுவாக, குளிர் காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறந்த பாதுகாப்புத் தேவை. இல்லையெனில் வைரஸ் தொற்றுக்கள் பரவி குழந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
சருமம் வறண்டு போதல்
குளிர்காலம் என்றாலே அனைவருக்குமே சருமம் வறண்டு போகக்கூடும். அதிலும், குழந்தைகளின் தோல் மிகவும் மிருதுவாக இருக்கும் தன்மையைக் கொண்டது. எனவே, குழந்தைகளின் தோல் நிலையை அடிக்கடி கவனித்துக் கொள்ள வேண்டும்.
உதடு வெடிப்பு
குளிர்காலத்தில் ஏற்படும் பெரும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. பொதுவாக, பிறந்த குழந்தைகளுக்கு வாயிலிருந்து எச்சில் வருவது பொதுவானது. இந்த நேரத்தில், அடிக்கடி குழந்தைகளின் உதடுகளை துடைத்தால் வெடிப்புகள் உண்டாகும். இவ்வாறு குழந்தைகளின் உதட்டில் ஈரப்பதம் இல்லையெனில், வெடிப்பு உண்டாகும்.
கன்னம் சிவந்து போதல்
குழந்தைகளுக்கு குளிர் ஒத்துக்கவில்லை எனில், அதனை எளிதாகக் கண்டறிந்து விடலாம். அதில் ஒன்று, குழந்தையின் கன்னங்கள் சிவப்பு நிறமாக மாறும் போது, அவர்களுக்கு குளிர்ந்த காற்று ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறலாம். இதன் காரணமாக அவர்கள் எரிச்சல் உணர்வு உண்டாகும். எனவே, இந்த அறிகுறி கொண்ட குழந்தைகளைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.