குழந்தைகளே உஷார்- சிறுவனின் உயிரை பறித்த கிரிக்கெட் பந்து!
ராமநாதபுரம் அருகே கிரிக்கெட் விளையாடிய போது, மார்பில் பந்து பட்டதால் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . விளையாட்டு வினையாகும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். நயினார்கோயில் அருகே வன்னிவயல் கிராமத்தை சேர்ந்த பழனிக்குமார் என்பவரின் மகன் சுபாஷ் குமார், அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
சுபாஷ் குமாருக்கு ஏற்கெனவே மூச்சுத்திணறல் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் நேற்று தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சுபாஷ் குமாரின் மார்பில் பந்து பட்டது.
அதனால் மயங்கி விழுந்த அவரை, பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சுபாஷ் குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனின் மறைவால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மரணத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.