குழந்தை இல்லாததால், பாலியல் துன்புறுத்தல்- மாற்றுத்திறனாளி மருமகளிடம் மாமனார் வெறிச்செயல்!
நாமக்கல் மாவட்டம் வடக்கு கொட்டாய் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜெயா (29) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார். அப்போது அவர், தனக்கும் சிங்களாந்தபுரத்தை சேர்ந்த மனோகரன் என்பவருடைய மகன் சேகருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும், கூட்டுக் குடும்பமாக சிங்களாந்தபுரத்தில் வாழ்ந்து வந்ததாகவும் குழந்தை இல்லாததால் தன்னுடைய மாமனார் மனோகரன் அடிக்கடி தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் கூறினார். மேலும் இது குறித்து கணவரிடமும், மாமியாரிடமும் முறையிட்டால் மாற்றுத்திறனாளி என்று கூட பாராமல் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் 3 மாதமாக தனது சொந்த ஊரில் வசதித்து வருவதாகவும், இது குறித்து ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் அவர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தை இல்லாததை காரணம் காட்டி, மாற்றுத்திறனாளி மருமகளிடம் மாமனாரே தவறாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.