கொரோனா பரவல்: பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள்?

July 6, 2022 at 10:42 am
pc

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில் சில நாள்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐம்பதுக்கும் கீழ் பதிவாகி வந்த கொரோனா தினசரி பாதிப்பு தற்போது 2500க்கும் மேல் பதிவாகி வருகிறது.

நேற்றைய பாதிப்பு நிலவரம்!

நேற்று ஒரே நாளில் 2,662 பேர் தமிழ்நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 26,692 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 2,662 பேருக்கு உறுதியாகியுள்ளது. அதாவது 10 சதவீத பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,060 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து செங்கல்பட்டு -373, திருவள்ளூர் -132, கோவை -137 காஞ்சிபுரம் -89 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தீவிரமாகும் கட்டுப்பாடுகள்!

தொடர்ந்து ஆறு நாள்களாக பாதிப்பு 2000க்கும் அதிகமாக பதிவாகிவருவதால் அரசும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபடியும் முதல்ல இருந்தா..?

கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மை காலமாக அதிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் திடீரென பாதிப்பு அதிகரிப்பது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிகளில் கட்டுப்பாடுகள்!

கடந்த இரு ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகளில் வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறவில்லை. தேர்வுகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த கல்வி ஆண்டு தொடங்கி இரு வாரங்களே நிறைவடைந்த நிலையில் மீண்டும் தொற்று அதிகரிப்பது மாணவர்களின் கல்வி குறித்தும், உடல்நிலை குறித்தும் ஒரு சேர கவலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தனியார் பள்ளிகள் எடுக்கும் முடிவு!

இந்நிலையில் சில தனியார் பள்ளிகள் கொரோனா பரவல் காரணமாக வகுப்புகளை சுழற்சி முறையில், அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடத்தலாமா என ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தவும், அதன் பின்னர் அரசின் அறிவிப்பையும் தொடர்ந்து வகுப்புகளை மாற்றும் முடிவை தனியார் பள்ளிகள் எடுக்கலாம் என்கிறார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website