கோடை காலத்தில் மிருதுவான, எண்ணெய் பசையற்ற சருமத்திற்கு பழ ஃபேஸ் பேக்… வீட்டிலேயே செய்யலாம்….
இந்த சம்மர் சீசன் வந்துவிட்டாலே எங்கிருந்த தான் முகத்தில் எண்ணெய் வருகிறதோ தெரியாது. அதுவும் ஏற்கனவே, ஆயில் சருமத்தை கொண்டவர்களுக்கு சுத்தம். சும்மாவே எண்ணெய் பிசுக்காக இருக்கும், இந்த சம்மர்ல இன்னும் அதிகமாகி விடும். அந்த சமயத்துல நாம்ப என்னென்னமோ கிரீம் எல்லாம் பயன்படுத்துவோம். ஆனால், அதெல்லாம் கொஞ்ச நேரத்திற்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும்.
அதற்கு பதிலாக வீட்டு வைத்தியத்தை ஏன் முயற்சி செய்ய கூடாது…!! இந்தியாவில் அழகு பராமரிப்பும், ஆயுர்வேதமும் எப்போதும் இணைந்து இருக்கின்றன. கடைகளில் ஏராளமான தோல் பராமரிப்பு பொருட்கள் இருந்தாலும், நம்மில் பலருக்கு பழமையான வீட்டு வைத்தியத்தின் மீது தான் விருப்பம். அந்த வகையில், சில பழங்களை வைத்து அழகான சருமத்தை பெற வீட்டிலேயே இயற்கையான ஃபேஸ் பேக்குகளை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.
பப்பாளி ஃபேஸ் பேக்
பப்பாளி உடலுக்கு சூடு தான், ஆனால் இதை வெயில் காலங்களில் முகத்தில் அப்ளை செய்தால் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை, கரும்புள்ளிகள், டேன் தோல் போன்றவை காணாமல் போய்விடும். அதற்கு, நன்றாக பழுத்த பப்பாளி பழத்தின் சதையை சிறிதளவு எடுத்து, அதை கையில் மசித்து முகத்தில் அப்ளைச் செய்யவும். சிறிது நேரம் தோலில் மசாஜ் செய்து, 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு கழுவவும்.
தக்காளி ஃபேஸ் பேக்
பருக்களை குணப்படுத்துவதில் எப்போதும் முதல் இடத்தில் இருப்பது தக்காளி தான். அதுமட்டுமல்லாமல், தக்காளி முகத்தில் எண்ணெய் பசையை நீக்கி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், சிவப்பாகவும் வைத்துக் கொள்ளும். அதற்கு, இரண்டு பழுத்த தக்காளியை நன்றாக அரைத்துக் கொண்டு, அதில் 2 ஸ்பூன் பால் சேர்த்து கலக்கி, முகத்தில் அப்ளைச் செய்யவும். அரை மணி நேரம் கழித்து கழுவவும். இதை கால், கைகளுக்கும் பயன்படுத்தலாம். அழகான குளோயிங் சருமத்தை பெற இதை ட்ரைப் பண்ணுங்க.
வாழைப்பழ ஃபேஸ் பேக்
வாழைப்பழம் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது. நன்றாக பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்து மசித்து முகம், கழுத்து முழுவதிலும் தடவவும். ஒருவேளை, முகப்பரு மற்றும் பிக்மெண்டேஷன் அதிகமாக இருந்தால் அதில் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிடுங்க.