கௌதமி விலகியது வருத்தமளிக்கிறது: குஷ்பூ கவலை!
பாஜவிலிருந்து நடிகை கௌதமி விலகியது குறித்து நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ வருத்தம் தெரிவித்துள்ளார். பாஜகவில் உள்ள அழகப்பன் தனது சொத்துக்களை ஏமாற்றியதற்கு, அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், கட்சியில் இருப்பவர்கள் தனக்கு ஆதரவாக இல்லை என்றும் கௌதமி குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், நேற்று பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்திருந்தார்.
இதற்கு, கட்சியில் இருந்து கௌதமி விலகியிருந்தாலும் அவருக்கு துணை நிற்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “எனது சக உறுப்பினரான கவுதமி பாஜகவில் இருந்து வெளியேறியது வருத்தமாக உள்ளது.
அவர் நல்ல பண்பாளர். சுயநலமில்லாத கடின உழைப்பாளியாக கட்சியில் பணியாற்றினார். அவரின் திட்டங்களுக்கு வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.