“சாதிய சிந்தனைகளில் இருந்து மாற்ற தமிழால் மட்டுமே முடியும்” – சீமான்!
சாதிய சிந்தனைகளில் இருந்து மாற்றுவதற்கு தமிழால் மட்டுமே முடியும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் தமிழ் ஓசை இசைக்குழுவின் சங்கத் தமிழிசை விழாவும் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
இந்த சங்கத் தமிழ் இசை விழாவில் திருக்குறள், புறநானூறு, நற்றிணை, பாரதி பாடல் என மொழிக்கு பங்காற்றிய பல பாடல்களுக்கு இசை கொடுத்து புதிய நிகழ்ச்சியை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் அரங்கேற்றினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சீமான், சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள். ஆனால் தற்போது சங்கம் வைத்து சாதி வளர்த்து கொண்டு இருக்கிறது என சாடினார்.
திருமால் கூட 2 அடியில் உலகை அளந்தார். ஆனால் திருவள்ளுவர் ஒண்ணே முக்கால் அடியில் உலகை அளந்து விட்டார். நம் ஆட்சி அமைந்தால் இதே இசை விழா, அரசு விழாவாக நடக்கும். ஆனால் அப்போது 90 நிமிடம் இல்லை 3 மணி நேரம் நடக்கும் என்று கூறினார்.பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய தலைமுறையில் சாதி வேரூன்றியுள்ளது.
சாதிய சிந்தனைகளில் இருந்து மாற்றுவதற்கு தமிழால் மட்டும்தான் முடியும். சாதியை ஒழிக்க அடிப்படைக் கல்வி தேவை என்றார். தமிழ் தேசிய சிந்தனை மட்டுமே, சாதிய சிந்தனையில் இருந்து விடுவிக்க கூடியது. ஒரு தலைமுறையை சாதிய சிந்தனைகளில் இருந்து விடுவிக்க இதுபோன்று தமிழ் பற்றை வளர்க்க வேண்டிய நிலை உள்ளது. எந்தப் பகுதியில் அடர்த்தியான சாதியினர் உள்ளனரோ அந்தப் பகுதியில் அதே சாதியினரை நிறுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதால் தமிழ்நாட்டில் சாதியானது வேரூன்றி அசைக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், இதனை கல்வியின் மூலமாக மட்டுமே அகற்ற முடியும் என்றும் சீமான் தெரிவித்தார்.