சாம்பாரில் இந்த 1 பொருளை மட்டும் சேர்த்துக்கோங்க…அப்புறம் சாம்பார் சும்மா கம கமன்னு மணக்கும்…!!
காய்கறிகள் இல்லாத சமயத்தில் இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள, சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிட, பெரும்பாலும் நம்முடைய வீட்டில் வெங்காய சாம்பார் வைப்போம். அதிலும் குறிப்பாக இந்த சின்ன வெங்காயத்தை போட்டு சாம்பார் வைத்தால் அதில் ஒரு தனி ருசி இருக்கும். அந்த சின்ன வெங்காயத்தின் மகிமை தான். நாம் எப்போதும் போல சின்ன வெங்காயம் சாம்பார் வைக்காமல். அதில் கூடுதல் சுவை தர இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து, சாம்பார் வச்சு பாருங்க. ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும். இந்த ரெசிபியை தெரிஞ்சுக்க நீங்க ரெடி தானே.
முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துவரம் பருப்பு 1/2 கப், இரண்டாக வெட்டிய தக்காளி பழம் – 4, பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் போட்டு பருப்பை நன்றாக வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பருப்பு வெந்ததும் அதை லேசாக மசித்து கொள்ளவும். தக்காளி அனைத்தும் பருப்பில் கலந்து விட வேண்டும். அந்த அளவுக்கு லேசாக கடைந்து கொள்ளுங்கள்.
அடுத்து சாம்பார் தாளிக்க ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் – 2 ஸ்பூன் ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன், தோல் உரித்த சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி அளவு, கருவேப்பிலை – 2 கொத்து, போட்டு வெங்காயத்தை பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, சாம்பார் பொடி – 1 ஸ்பூன், மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன், போட்டு ஒரு வதக்கு வதக்கி உடனடியாக சின்ன நெல்லிக்காய் அளவு புளி கரைசலை இதில் ஊற்றி, இரண்டு நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.
பிறகு சாம்பாருக்கு தேவையான அளவு உப்பு போட்டு வேக வைத்த பருப்பை இதில் ஊற்றி சாம்பாருக்கு தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி வெல்லம் – 1/2 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க வையுங்கள். பருப்பின் பச்சை வாடை போகட்டும்
இதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. அதில் இரண்டு கைப்பிடி அளவு தேங்காய் துருவலை போட்டு 1 கைபிடி அளவு தண்ணீரை ஊற்றி, இதை நன்றாக அரைத்து விட வேண்டும். தேங்காயை பேஸ்ட் போல கட்டியாக அரைக்க கூடாது. தண்ணீர் பதத்தில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது சாம்பார் கொதிக்கின்றது அல்லவா அந்த சாம்பாரில் இந்த தேங்காயை ஊற்றி நன்றாக கலந்து விட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் சாம்பாரை கொதிக்க வைத்தால் மணக்க மணக்க சின்ன வெங்காய சாம்பார் தயாராகிவிடும். இதன் மேலே கொத்தமல்லி தலையை தூவி சுட சுட இட்லி ஊற்றி சாப்பிடுங்கள் வேற லெவல் டேஸ்ட்.