சின்னத்திரை சீரியலுக்கு வரும் ‘முதல் மரியாதை’ நடிகை.. என்ன தொடர்? எந்த டிவி?




சிவாஜி கணேசன் நடிப்பில், பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில் கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான ’முதல் மரியாதை’ திரைப்படத்தில் நடித்த நடிகை நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளதாகவும் அவர் சின்னத்திரையில் உள்ள சீரியலில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
’முதல் மரியாதை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரஞ்சனி. இந்த படத்தை அடுத்து அவர் ’கடலோர கவிதைகள்’ ’ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ ’மண்ணுக்குள் வைரம்’ ’முத்துக்கள் மூன்று’ ’கல்யாண ராசி’ உள்பட பல தமிழ் படங்களில் நடித்தார். மேலும் இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்தார் என்பதும் சில மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ரஞ்சனி தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டிலாகிவிட்ட நிலையில் கடந்த பல ஆண்டுகளாக அவர் திரை உலகில் நடிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் ரீஎன்ட்ரி ஆகிறார். ஏசியாநெட் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ’சந்திரகாந்தம்’ என்ற மலையாள சீரியலில் அவர் நடிக்க வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் விரைவில் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.