சீனாவில் அதிகரிக்கும் கொரோனா !!குவியும் சடலங்கள்… மரண பீதியில் மக்கள்..
சீனாவில் கொரோனா பாதிப்பால் இறந்த சொந்தங்களை உறவினர்களே தனியாக தகனம் செய்யும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
நாளுக்கு 1,000 சடலங்களுக்கு மேல்
சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தகன இல்லங்களில் நாளுக்கு 1,000 சடலங்களுக்கு மேல் எரியூட்டும் நிலை உருவாகியுள்ளதுடன், தற்போது இறுதிச்சடங்கு நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக 40 சடலங்கள் தகனம் செய்யப்பட்டுவந்த நிலையில் தற்போது 200 சடலங்கள் வரையில் எரியூட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. தகன இல்லங்களில் பணியாற்றும் ஊழியர்கள், 24 மணி நேரமும் வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
பிரித்தானிய நிறுவனமான Airfinity வெளியிட்டுள்ள தகவலில், சீனாவில் ஒவ்வொரு நாளும் 9,000 மக்கள் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இறக்கின்றார்கள். எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இறப்பு எண்ணிக்கை 1.7 மில்லியனை எட்டிவிடும்.
250 மில்லியன் மக்கள்
சீன சுகாதாரத்துறை தரவுகளில், டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் 250 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றுக்கு இலக்கானதாக பதிவாகியுள்ளது. ஆனால், அரசு தரப்பில் மருத்துவமனைகளுக்கோ பொதுமக்களுக்கோ எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
செங்டுவின் சிச்சுவான் மாகாணத்தில் 10ல் 8 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கான மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொற்றுக்கு இலக்காகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடுவதில் சுகாதாரத்துறை தாமதம் ஏற்படுத்தி வருகிறது. மேலும், வெளிநாடுகள் பல சீன பயணிகளுக்கு விசா அளிக்க மறுத்து வருவதுடன், விமான நிலையங்களில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதித்துள்ளது.