சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஜில்லுனு நுங்கு பாயாசம்… இப்படி செஞ்சி அசத்துங்க …
வெயில் காலம் வந்துவிட்டாலே உடலில் வெப்பமும் அதிகரித்துவிடுகிறது. இதனால், உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. ஆனால், அதற்காக எப்பவும் தண்ணீரை மட்டுமே குடித்துக் கொண்டிருக்க முடியாது. அப்படி அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால் உடலில் அதிகப்படியான வியர்வை வெளியேறி எரிச்சலூட்டும். எனவே, தண்ணீர் மட்டும் குடிக்காமல் உடல் உஷ்ணத்தை போக்கும் மோர், தயிர், இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், கரும்பு ஜூஸ் மற்றும் நுங்கு போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
இது உடலின் வெப்பத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், நமக்கு பல நன்மைகளையும் வாரி வழங்குகிறது. இந்த பொருட்களை நேரடியாகவும் சாப்பிடலாம் அல்லது மாற்று முறையிலும் சாப்பிடலாம். அந்த வகையில், இப்போது நுங்கை பயன்படுத்தி ஒரு ஹெல்த்தியான டேஸ்ட்டான நுங்கு பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதற்கு அதிகம் நேரம் செலவிட தேவையில்லை.
தேவையான பொருட்கள்:
நாட்டு சர்க்கரை – 1/4 கப்
பால் – 2 கப்
நுங்கு – 8
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
நெய் – 1 ஸ்பூன்
முந்திரி, பாதாம் – தேவையான அளவு
குங்குமப்பூ – 2 சிட்டிகை
செய்முறை:
நுங்கின் மேல் தோலை நீக்கி, அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
முதலில் ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி நன்கு காய்ச்சிக் கொள்ளுங்கள். எவ்வளவு வேண்டுமே அந்த அளவிற்கு பாலை சுண்டக் காய்ச்ச வேண்டும்.
இப்போது, அதில் நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி இரண்டையும் சேர்த்து மிதமான தீயில் சிறிதுநேரம் கொதிக்க விடவும்.
இப்போது மசித்த நுங்கை போட்டு கிளறி, அடுப்பை அணைத்து பாயாசத்தை இறக்கிவிடுங்கள்.
பின்னர், ஒரு வானலியில் நெய் ஊற்றி பாதாம், முந்திரியை பொன்னிறமாக வறுத்து பாயாசத்தில் கொட்டவும்.
சிறிதளவு குங்குமப்பூவை அதன் மீது தூவி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான நுங்கு பாயாசம் ரெடி.
இதை சூடாகவும் சாப்பிடலாம் அல்லது ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லுனும் சாப்பிடலாம். ஆனால், ஜில்லுனு சாப்பிட்டால் அதன் ருசி இன்னும் அருமையாக இருக்கும்.