சூடான போண்டா சூப் ஒரு முறை செய்து எல்லோரையும் அசத்துங்க ….!!

July 18, 2022 at 3:56 pm
pc

போண்டா சூப் கர்நாடகாவில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான போண்டா வகை. உளுந்து போண்டா செய்து அதனை துவரம்பருப்பு கொண்டு செய்யப்படும் சூப்பில் ஊற வைத்து சாப்பிடுவது தான் போண்டா சூப் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பலவிதமான போண்டா வகைகள் உண்டு உருளைக்கிழங்கு போண்டா, உளுந்து போண்டா, போன்றவை மிகவும் பிரபலம். போண்டா சூப் இவற்றிலிருந்து சற்று மாறுபட்டது அதேசமயத்தில் சுவையும் அபாரமாக இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு – 1 கப்
தேங்காய் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 3
பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு
கருவேப்பிலை – சிறிதளவு
சீரகம் – 1/2 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்
சமையல் எண்ணெய் – 250 கிராம்
துவரம் பருப்பு – 1/2 கப்
கடுகு – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 5 நீளவாக்கில் கீறியது
பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
தக்காளி -1
உப்பு – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
எலுமிச்சை பழச்சாறு – 1 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை

ஒரு கப் உளுத்தம் பருப்பை கழுவிவிட்டு 2 மணி நேரம் ஊற வைக்கவும். 2 மணி நேரத்திற்குப் பிறகு தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். உளுந்து மாவுடன் 1/4 கப் தேங்காய் ( துருவியது அல்லது பொடியாக நறுக்கியது), பொடியாக நறுக்கிய 3 பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து கொள்ளவும்.


அதனுடன் 1/2 தேக்கரண்டி சீரகம், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும். நன்கு பிசைந்த பின்னர் கையை ஈரம் செய்துகொண்டு மாவிலிருந்து சிறிது சிறிதாக உருட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும். நன்கு வெந்து பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து தனியே எடுக்கவும். இதே போல் எல்லா மாவையும் போண்டா செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். சூப் செய்வதற்கு ஒரு பேனில் 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.


அதனுடன் 1/2 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி சீரகம், சிறிதளவு கருவேப்பிலை, 5 பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பெரியவெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும். பின்னர் ஒரு தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். தக்காளி மசியும் வரை வதக்கி கொள்ளவும். பின்னர் வேக வைத்து மசித்த துவரம் பருப்பு சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 2 கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.


சூப் பக்குவத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்அதனுடன் தேவையான அளவு உப்பு, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். அதனை 2 – 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். பின்னர் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு மற்றும் சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.ஒரு கப் அல்லது குழியான தட்டில் போண்டாக்களை வைத்து அதன் மீது சூடாக சூப் ஊற்றி ஊற வைத்து அல்லது சுடசுட பரிமாறலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website