செலவே இல்லாமல் சத்தான வடிகஞ்சி சூப் செய்யலாம் வாங்க …!!
வடிகஞ்சி சூப், உடலை உரமாக வைத்திருக்க உதவும். காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள், நார்ச் சத்து மற்றும் கஞ்சியில் உள்ள கார்போஹைட்ரேட், குளூகோஸ், தையமின் போன்றவை உடலால் நேரடியாகக் கிரகிக்கப்படும். இஞ்சி சேர்ப்பதால், காலையில் குடிப்பதன் மூலம், மதியம் பித்தம் ஏறாமல் தடுக்கலாம். மோர், நல்ல பாக்டீரியாவைக் கொடுப்பதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குழந்தைகள், வயதானவர்கள், நோயுற்றவர்கள் அனைவரும் சாப்பிட ஏற்றது.
தேவையான பொருட்கள்
சாதம் வடித்த கஞ்சி – 2 கப்
புளித்த மோர் – அரை கப்
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2 முதல் 3
கறிவேப்பிலை
மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
விரும்பிய காய்கறிக் கலவை – கால் கப்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
பச்சை மிளகாய், இஞ்சியை நீளவாக்கில் நறுக்கவும். எண்ணெயில் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு வதக்கி, காய்கறிக் கலவையையும் சேர்த்து, வடித்த கஞ்சி, அரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு இறக்கிவைத்து, கடைந்த மோரை அதனுடன் சேர்க்கவும். இறுதியாக மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.