செல்போன் திருடிய இளைஞரை தலையில் கல்லை போட்டு கொன்ற நண்பர்கள்
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அப்பு (24). இவர், தண்டையார்பேட்டை இளைய முதலிதெரு மேம்பாலம் பகுதியை சேர்ந்த கைலாசம் தெருவைச் சேர்ந்த மகேஷ் (29), வைரமுத்து (24) ஆகியோருடன் தங்கி இருந்தார். இவர்கள் மீது காவல் நிலையங்களில் சிறு சிறு திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நண்பர்கள் அனைவரும் வழக்கம்போல் மேம்பாலத்துக்கு அடியில் படுத்து தூங்கினர். அப்போது மகேஷின் செல்போனை அப்பு திருடிவிட்டார். இதையறிந்த மகேஷ், தனது செல்போனை திருப்பி தரும்படி கேட்டார். அதற்கு அப்பு, “செல்போனை தர முடியாது. உன்னால் என்ன செய்ய முடியுமோ? செய்து கொள்” என்று கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், தனது நண்பர் வைரமுத்துவுடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மாட்டுவண்டியில் தூங்கிகொண்டிருந்த அப்புவை கீழே தூக்கி போட்டு, அருகில் கிடந்த பெரிய கல்லை அவரது தலையில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அப்பு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ், வைரமுத்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.