தமிழகத்தின் முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் 5 ஆம் திகதி நினைவு அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவுள்ளார்.
இதில் கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள பொறுப்பாளர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்துமாறு அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரியுள்ளது.அத்துடன், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்கள் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும், கட்சி செயல்பட்டு வரும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆங்காங்கே ஜெயலலிதா படத்தை வைத்து மலரஞ்சலி செலுத்த வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.