டெல்லியில் முனைவர் பட்டம்… ஆவடி அருகே சடலமாக கிடந்த மாணவி…
சென்னை ஆவடிக்கும் ஹிந்து கல்லூரிக்கும் இடையே உள்ள ரயில் பாதையில் ரயில்வே ஊழியர்கள் வழக்கம்போல நேற்று வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது, இளம்பெண் ஒருவர் காயங்களுடன் தண்டவாளம் அருகே சடலமாக கிடந்துள்ளார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை ஆய்வு செய்தபோது அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த பெண் அருகே விழுந்து கிடந்த ஐடி கார்டை பார்த்தபோது அவர் பெயர் மேகா ஸ்ரீ (30) என்பதும் அவர் டெல்லியில் பி எச்.டி முடித்துவிட்டு சென்னை ஐஐடி-யில் மூன்று மாத ஆராய்ச்சி படிப்பிற்காக வந்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஆவடி ரயில்வே போலீசார், ஓடும் ரயிலில் இருந்து மாணவி தவறி விழுந்து உயிரை விட்டாரா அல்லது கொலையா என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவியின் தலையில் அதிக காயம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் சடலத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோரை தொடர்புகொள்ள போலீசார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சென்னை ஐஐடி நிர்வாகத்திடம் மாணவி குறித்த தகவலை சேகரித்து வருகின்றனர். டெல்லியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள மாணவி ரயில் தண்டவாளம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.