டைனோசர் முட்டையை குலதெய்வமாக வழிபடும் கிராம மக்கள்!

December 20, 2023 at 8:58 pm
pc

முன்னோர்களின் வழியில் டைனோசர்களின் முட்டையை குலதெய்வமாக கிராமத்தினர் வழிபடும் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டம் பட்லியா கிராமத்தைச் சேர்ந்தவர் வெஸ்டா மண்டலோய் (40). இவர், ஒரு உருண்டையான பொருளை குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளார்.

இந்த உருண்டையை ககர் பைரவ் என்றும் கூறுகின்றனர். அதாவது, ககர் என்றால் நிலம் அல்லது பண்ணை, பைரவ் என்றால் இறைவன் என்று அர்த்தம். இதனை, வழிபடுவதன் மூலம் கால்நடை பிரச்சனைகளில் இருந்தும், துரதிர்ஷ்டங்களில் இருந்தும் மீள்வதாக அவர்களின் முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது.

இதனை மண்டலோய் கடைபிடித்து வருவது மட்டுமல்லாமல், தொடர்ந்து பூஜைகளும் செய்து வருகிறார். அவரைத்தவிர, தார் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் தோண்டும் போது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் உருண்டையை அப்பகுதியில் உள்ள மக்கள் குலதெய்வமாக வணங்குகின்றனர்.

இந்நிலையில், லக்னோவின் பீர்பால் சாஹ்னி இன்ஸ்டிடியூட் ஆப் பேலியோ சயின்சஸ் நிபுணர்கள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, தார் பகுதி மக்கள் குலதெய்வமாக வழிபடும் உருண்டை டைனோசர் முட்டை என்பது தெரியவந்தது.

அவை, டைட்டானோசொரஸ் இனத்தை சேர்ந்தவை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தனை நாட்களாக டைனோசர் முட்டையை வழிபட்டு வந்தோம் என அப்பகுதி மக்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website